யுரேனியம் செறிவூட்டும் பணியில் தங்கள் நாடு அடைந்துள்ள முன்னேற்றம் குறித்த காட்சிகளை நேரடியாக ஒளிபரப்பி, உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது ஈரான்.
அமெரிக்கா உள்ள உலக நாடுகளின் எதிர்ப்புகளுக்கிடையே தலைநகர் டெஹ்ரான் அருகில், போர்டோ பகுதியில், பூமிக்கடியில் மிக மிக பாதுகாப்பான முறையில், அணுஆயுதங்கள் தயாரிக்க உதவும் யுரேனியம் செறிவூட்டும் பணியை ரகசியமான மலைப்பகுதியில், ஈரான் நடத்தி வந்தது. இதற்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில், யுரேனியம் செறிவூட்டும் பணியில் தங்கள் நாடு அடைந்துள்ள முன்னேற்றம் குறித்தும், செறிவூட்டுதலுக்கு பயன்படும் யுரேனிய பிளேட்டுகளை பொருத்தும் காட்சிகளையும் ஈரான் நாட்டின் தேசிய தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. இப்பணிகளை அந்நாட்டின் அதிபர் அகமதின்ஜாட் பார்வையிட்டார். அவருடன் ஈரான் அணுவிஞ்ஞானிகள் உடன் இருந்தனர். ஈரானின் இந்த செயல் உலக நாடுகளை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்த அணு சக்தி திட்டத் துவக்க விழாவில் பேசிய அதிபர் அகமதி நிஜாத் கூறியதாவது: ஈரானின் அணு சக்தி திட்டம் ஆக்கப்பூர்வமானது. அணு சக்தி அறிவியல் யாருக்கும் சொந்தமானதல்ல. அதனால், ஈரானின் அணு சக்தி திட்டங்களை எதிர்ப்பதை நிறுத்துங்கள். ஒவ்வொரு அணு சக்தி திட்டத்தின் மீதும், அமெரிக்கா நெருக்கடி கொடுக்கிறது. பிற நாடுகள் அத்துறையில் முன்னேறுவதை, அமெரிக்கா விரும்பவில்லை.பத்தாயிரம் குண்டுகளை வைத்துள்ள அமெரிக்கா தான், குண்டுகளை எதிர்ப்பதாக கூறி வருகிறது. இந்த செறிவூட்டல் கருவியின் வடிவமைப்பை, சர்வதேச அணு சக்தி ஏஜென்சிக்கு அளிக்கவும் ஈரான் தயார்.இவ்வாறு நிஜாத் தெரிவித்தார்.
தனிமைப்படுத்துங்கள்: அமெரிக்கா ஆவேசம்: ஈரான் யுரேனியம் செறிவூட்டும் பணியை வெளிப்படையாக ஆரம்பித்திருப்பது அமெரிக்காவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரானை உலக நாடுகள் தனிமைப்படுத்த வேண்டும் என ஒபாமா நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பெட்ரோல் கட்: இதனிடையே மற்றொரு அதிர்ச்சியாக, 6 ஐரோப்பிய நாடுகளுக்கு பெட்ரோலிய சப்ளையை ஈரான் நிறுத்தியுள்ளது. ஈரான் அணுஆயுதம் தயாரிப்பதால், அந்நாட்டிலிருந்து பெட்ரோல் இறக்குமதியை நிறுத்தப்போவதாக ஐரோப்பிய யூனியன் நாடுகள் அறிவித்திருந்தன. இந்நிலையில், அதற்கு முன்பாகவே ஈரான் தனது பெட்ரோல் சப்ளையை நிறுத்தி ஐரோப்பிய நாடுகளுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.