Friday, June 22, 2012

யானையின் எடை எவ்வளவு..?

அரசர் ஒருவருக்குத் திடீரென்று ஒரு நாள், தன் பட்டத்து யானை எவ்வளவு எடை இருக்கும் என்று அறிய ஆவல் ஏற்பட்டது. அந்தக் காலத்தில் எடைமேடைகள் எல்லாம் இல்லை; யானையை அளக்கும் அளவுக்குப் பெரிய தராசும் கிடையாது.

''யானையின் எடையை எப்படி அறிவது?'' என்று அமைச்சர்களிடம் கேட்டார் மன்னர். யாருக்கும் அதற்கான வழி தெரியவில்லை. அப்போது அமைச்சர் ஒருவரின் பத்து வயது மகன், ''நான் இதன் எடையைச் சரியாகக் கணித்துச் சொல்கிறேன்'' என்றான். அதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். ஆனால், அவனுக்கும் ஒரு வாய்ப்பு கொடுத்தார் மன்னர்.

அந்தச் சிறுவன், யானையை நதிக்கு அழைத்துச் சென்றான். அங்கே இருந்த மிகப் பெரிய படகில் யானையை ஏற்றினான். யானை ஏறியதும், தண்ணீரில் ஆழ்ந்தது படகு. உடனே அவன், தண்ணீர் நனைத்த மட்டத்தைப் படகில் குறியீடு செய்தான். பிறகு, யானையைப் படகிலிருந்து இறக்கி, பெரிய பெரிய கற்களைப் படகில் ஏற்றச் சொன்னான். முன்பு குறித்து வைத்திருந்த குறியீடு அளவுக்குப் படகு தண்ணீரில் மூழ்கும் வரை, கற்கள் ஏற்றப்பட்டன. பின்பு, அரசரிடம் அந்தக் கற்களைக் காட்டி, ''அவற்றின் எடைதான் அந்த யானையின் எடை'' என்றான். அனைவரும் வியந்தனர். அவனது புத்திசாலித்தனத்தைப் போற்றிப் புகழ்ந்தனர்.

எல்லோரும் யானையை ஒட்டுமொத்த உருவமாகத்தான் பார்த்தார்கள். ஆகவே, அவர்களால் அதன் எடையைக் கணிக்கமுடியும் எனும் நம்பிக்கை வரவில்லை. ஆனால் அந்தச் சிறுவனோ, பல எடைகளின் கூட்டுத்தொகையே யானையின் எடை என்று எண்ணிச் செயல்பட்டான்; எளிதில் விடை கண்டான்.

எவ்வளவு பெரிய செயலாக இருந்தாலும், அதைச் சின்னச் சின்ன செயல்களாகப் பிரித்துக்கொள்ளவேண்டும். பிறகு, அந்த ஒவ்வொரு செயலையும், செவ்வனே செய்து முடிக்கவேண்டும். அப்போது, ஒட்டுமொத்தத் திட்டமும் அழகாக நிறைவேறிவிடும்.

- வெ. இறையன்பு 

Wednesday, June 20, 2012

மூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்

1. காலையில் உணவு உண்ணாமல் இருப்பது
காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.

2.மிக அதிகமாகச் சாப்பிடுவது
இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

3. புகை பிடித்தல்
மூளை சுருகவும், அல்ஸைமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.

4.நிறைய சர்க்கரை சாப்பிடுதல்
நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும்மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

5. மாசு நிறைந்த காற்று
மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்து தடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லாவிட்டால், மூளை பாதிப்படையும்.

6.தூக்கமின்மை
நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையான அளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.

7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது
தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள் சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.

8.நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது
உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

9.மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது
மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.

10. பேசாமல் இருப்பது
அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.

ஆரோக்கியம் தரும் மூலிகைக் குடிநீர்

நோயில்லாத வாழ்வே சிறப்பான வாழ்க்கையாகும். இத்தகைய வாழ்வு வாழ நாம் கடைப்பிடிக்க வேண்டியது சுகாதாரமே.. சுகாதாரம் என்பது உண்ணும் உணவு முதல் உடுத்தும் உடை வரை எல்லாமே அடங்கும். அதுபோல், உடலும், மனமும் நன்றாக இருந்தால் அதுவே ஆரோக்கியமாகும்.
இன்றைய சூழலில் குடிநீர், உணவு, இருப்பிடம், காற்று என அனைத்தும் மாசுபட்டுக் கிடக்கின்றன. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் குடிநீரினால் உண்டாகும் நோய்களே மக்களை அதிகம் பாதிப்பதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. பிளாஸ்டிக் பாட்டில்களில் அடைத்து விற்கும் நீர் கூட சுத்தமானது என்பதை உறுதி செய்ய முடியாது. இவைகள் பெரும்பாலும் இரசாயன வேதிப் பொருட்கள் கலந்ததாக உள்ளன. இவற்றை அருந்துவதால் பல நோய்களுக்கு இதுவே அஸ்திவாரமாக அமைந்து விடுகிறது. இதனால் நன்கு சுத்தமான நீரை அருந்த வேண்டும். உணவின் மூலமும், நீரின் மூலமும் நோய் தடுக்கும் மருந்துகளை உட்கொள்ள சித்தர்கள் வலியுறுத்தியுள்ளனர்.


அதில் வெறும் குடிநீரை அருந்துவதை விட சித்தர்கள் கண்டறிந்து கூறியுள்ள மூலிகைக் குடிநீரை அருந்தினால் உடலுக்கு சக்தி கிடைப்பது மட்டுமின்றி நோயும் தடுக்கப்படும்.அந்த வகையில் ஆவாரம் பூ குடிநீர், கரிசாலை குடிநீர், நன்னாரி குடிநீர், துளசி குடிநீர், வல்லாரை குடிநீர், சீரகக் குடிநீர், நெல்லிப்பட்டைக் குடிநீர், மாம்பட்டைக் குடிநீர், ஆடாதோடைக் குடிநீர், போன்றவை அடங்கும்.



ஆவாரம்பூ குடிநீர்
“ஆவாரை பூத்திருக்க சாவாரைக் கண்டதுண்டோ..”

என்ற மருத்துவப் பழமொழி உண்டு. ஆவாரம் பூ எண்ணற்ற மருத்துவ குணங்களைக் கொண்டது. இது நோய்களைக் குணப்படுத்துவதால் நோயினால் மனிதன் இறப்பதை தடுக்கிறது. இன்றைய உலக மக்கள் தொகையில் பாதிபேர் சர்க்கரை நோயால் அவதிப்படுகின்றனர். இந்த சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் குணம் ஆவாரைக்கு உண்டு. மேலும் மேனிக்கு தங்க நிறத்தைக் கொடுக்கும் தங்கநிறப் பூவும் இதுதான்.

நீரில் ஆவாரம் பூக்கள் அல்லது காயவைத்த ஆவாரம் பூ பொடி சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி, குடிநீராக அருந்தி வரலாம்.

  • இது உடல் சூடு, பித்த அதிகரிப்பு, நீர்க்கடுப்பு, அதிக உதிரப்போõக்கு, ஒழுங்கற்ற மாதவிடாய், குடற்புண் வயிற்றுப்புண் போன்றவை நீங்கும்.
  • நீரிழிவு நோயாளிக்கு இது மிகவும் சிறந்த மூலிகைக் குடிநீர் ஆகும்.
  • இரத்தத்தைச் சுத்தப்படுத்தும், உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வியர்வை மூலம் வெளியேற்றி, சருமத்திற்கு மினுமினுப்பைக் கொடுக்கும்.
  • பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலை அறவே நீக்கும்.

இதனைத் தொடர்ந்து அருந்தி வந்தால், உடலை நோயின்றி அரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.

துளசி குடிநீர்
துளசி நமக்கு அருமருந்தாகும். துளசி இலையுடன் சீரகம் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து குடிநீராக அருந்தி வந்தால் உடலுக்கு பல நன்மைகள் உண்டு.

  • அடிக்கடி வெளியூர் பயணம் செய்பவர்களுக்கும், வெயில் மற்றும், மழைக்காலங்களில் அலைந்து திரிபவர்களுக்கு துளசி குடிநீர் அருமருந்தாகும். இது உடற்சூடு, பித்தம் போன்றவற்றைத் தணிக்கக் கூடியது.
  • டைபாய்டு, மஞ்சள்காமாலை, மலேரியா, காலரா நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். தொண்டைச்சளி, வறட்டு இருமல், புகைச்சல், தலையில் நீர் கோர்த்தல், அடிக்கடி தும்மல், போன்றவற்றைப் போக்கும். இரத்தத்தில் உள்ள சளியை நீக்கி இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

வல்லாரை குடிநீர்
எல்லா நோய்களுக்கும் கொடுக்கப்படும் மருந்தில் முதல் மருந்தாகவும், துணை மருந்தாகவும் இருப்பது வல்லாரை.இதனை சரஸ்வதி மூலிகை என்று அழைக்கின்றனர்.


  • இது மூளைக்கும், அதன் செயல்பாட்டிற்கும் அதாவது அறிவுத் திறனுக்கும், ஞாபக சக்திக்கும் ஏற்ற மூலிகையாகும்.
  • காயவைத்த வல்லாரை பொடியை நீரில் போட்டு கொதிக்க வைத்து அனைவரும் அருந்தலாம்.
  • இது ஞாபக சக்தியைத் தூண்டுவதுடன், பித்த அதிகரிப்பைக் குறைக்கும். இரத்தத்தில் ஏற்படும் இரும்புச் சத்துக் குறைபாட்டைப் போக்கி இரத்தச் சோகையை நீக்கும். நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுக்கும். தொழுநோய், யானைக்கால் நோய், மூலம், மூட்டுவலி போன்ற வற்றிற்கு சிறந்த மருந்தாகும்.

கரிசாலை குடிநீர்
“ஏர்தரும் ஆன்ற கரிசாலையால் ஆன்மா சித்தி”

என்றார் வள்ளலார் இராமலிங்க அடிகள். அத்தகைய சிறப்பு வாய்ந்த கரிசாலை கண்களுக்கு ஒளியையும் உடலுக்குத் தேவையான இரும்புச் சத்தையும் தரக்கூடியது.

வெள்ளை கரிசாலை இலைச் சூரணம் 200 கிராம் எடுத்து அதனுடன் முசுமுசுக்கை இலை 35 கிராம், நற்சீரகத்தூள் 35 கிராம் அளவு சேர்த்து கொதிக்க வைத்து தேவையான அளவு பனங்கற்கண்டு அல்லது பனைவெல்லம் கலந்து காலை, மாலை தேநீருக்குப் பதிலாக அருந்தலாம். அல்லது, கரிசாலையுடன் நற்சீரகம் சேர்த்துகொதிக்க வைத்து குடிநீராகவும் அருந்தலாம்.

  • கரிசாலை இரத்த சோகையைப் போக்கக் கூடியது. இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற நீர்களை வெளியேற்றும் தன்மை கொண்டது. இரத்தத்தில் உள்ள பித்தத்தைக் குறைக்கும்.
  • இரத்தக் கொதிப்பு, காசநோய், எலும்பு தேய்மானம் போன்றவை ஏற்படாமல் தடுக்கும்.

சீரகக் குடிநீர்
சீர்+அகம் =சீரகம். அகம் என்னும் உடலை சீர்படுத்துவரே சீரகத்தின் சிறப்பான குணமாகும்.

சீரகத்தை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டி ஆறிய நீரை தினம் பருகி வருவது நல்லது.

  • இது உடற் சூட்டைத் தணிக்கும்.பித்தத்தைக் குறைக்கும்.
  • ரத்தத்தில் உள்ள தேவையற்ற பொருட்களை நீக்கி, ரத்தத்தைக் சுத்தப்படுத்தும். வியர்வை மற்றும் சிறுநீரைப் பெருக்கும்.
  • கண் சூடு குறைக்கும். வாய்ப்புண் வயிற்றுப்புண்ணைப் போக்கும்.
  • சரும நோய்கள் வராமல் தடுக்கும். இதயத்திற்கு இதமான குடிநீர்தான் சீரகக் குடிநீர்.

மாம்பட்டைக் குடிநீர்
மாம்பட்டையை இடித்து நீரில் கொதிக்க வைத்து குடிநீராக்கி அருந்தினால், நரம்புகள் பலப்படும், உடல் சூடு தணியும், சரும நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். பித்தத்தைக் குறைக்கும். அஜீரணக் கோளாறை நீக்கும்.

நெல்லிப்பட்டைக் குடிநீர்
நெல்லி மரப் பட்டையை காயவைத்து இடித்து பொடியாக்கி குடிநீரில் இட்டு காய்ச்சி அருந்துவது நல்லது.

இது ஆஸ்துமா, சளி, இருமல், வறட்டு இருமல், தொண்டைக்கட்டு, நுரையீரல் சளி, இரத்தச் சளி போன்றவற்றைப் போக்கும். ரத்தத்தைச் சுத்தப்படுத்தும். உடல் சூட்டைத் தணிக்கும். குடல்புண்களை ஆற்றும். மூலநோய்க் காரர்களுக்கு மூலநோயின் பாதிப்பைக் குறைக்கும்.

ஆடாதோடைக் குடிநீர்
ஆடாதோடை இலைகளை சிறிதாக நறுக்கி தேன் விட்டு வதக்கி நீரில் போட்டு கொதிக்க வைத்து குடீநீராக அருந்தி வந்தால்,

சளி, இருமல், கோழைக்கட்டு, நாள்பட்ட நெஞ்சுச் சளி, மூக்கில் நீர் வடிதல், நுரையீரல் சளி போன்றவை நீங்கும்.

வாந்தி, விக்கல் போன்றவை குணமாகும்.

சைனஸ், ஆஸ்துமா நோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு இது சிறந்த மருந்து.

உளுந்து (Black Gram)

இந்திய உணவு வகைகள் உலக உணவு வகைகளில் முதன்மையானது. சீன உணவு வகைகளில் பெரும்பாலும் அசைவம் நிறைந்திருக்கும். ஆனால் முழுக்க முழுக்க மூலிகைகள் நிறைந்த சைவ உணவே இந்திய உணவாகும்.

இந்திய உணவில் இரண்டு வகை உண்டு.

1. தென்னிந்திய உணவு வகை,
2. வட இந்திய உணவு வகை.

தென்னிந்திய உணவுகளை விருந்தோம்பல் உணவு என்பார்கள். அறுசுவை கொண்ட உணவு இதுதான். குறிப்பாக தமிழக மக்களின் பிரசித்திபெற்ற உணவு இட்லிதான். தமிழக இட்லியை விரும்பி உண்ணாதவர் உலகில் எவரும் இருக்க முடியாது.

குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற உணவு இட்லிதான். இவை உடலுக்கு தெம்பையும் புத்துணர்ச்சியையும் கொடுத்து உடலை பாதுகாக்கிறது.

இந்த இட்லியில் இவ்வளவு மருத்துவக் குணம் உள்ளதற்குக் காரணம் உளுந்துதான். மனிதனுக்கு தேவையான அனைத்து ஊட்டச் சத்துக்களும் நிறைந்த உணவுகளுள் உளுந்தும் ஒன்று. இதன் வெளித் தோல் கருப்பாகவும், உட்புறம்நன்கு வெண்மையாகவும் காணப்படும்.

இந்தியாவில் அனைத்து பகுதியிலும் பயிராகும் ஒருவகை செடியாகும். பணப்பயிர்களில் இதுவும் ஒன்று.கடுமையான மற்றும் கொடிய நோயின் தாக்கத்திலிருந்து விடுபட்டவர்களின் உடல் மிகவும் மோசமாகவும், பலவீனமாகவும் காணப்படும். மேலும் இவர்கள் நோயிலிருந்து விடுபட்டும் நோயாளி போல தோற்றமளிப்பார்கள். இவர்களை தேற்றி தேகத்தை வலுப்படுத்த உளுந்து சிறந்த மருந்தாகும்.

இவர்கள் உளுந்தை களியாகவோ கஞ்சியாகவோ அல்லது அரிசி சேர்த்து அரைத்து வேகவைத்து உணவாக உண்டு வந்தால் தேகம் வலுப்பெறும், எலும்பு, தசை, நரம்புகளின் ஊட்டத்திற்கு நல்லது.

உடல் சூடு தணிய
இன்றைய அவசர உலகில் நோயின் தாக்கமும் அவசரமாக உள்ளது. இதற்கு காரணம் உடல் சூடுதான். மன அழுத்தம், ஓய்வில்லா உழைப்பு, தூக்கமின்மை போன்றவற்றால் உடல் சூடு ஏற்படுகிறது.

உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி, சுக்கு, வெந்தயம் சேர்த்து அரைத்து களி செய்து பனைவெல்லத்துடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும்.

எலும்பு முறிவு இரத்தக் கட்டிகளுக்கு
தடுமாறி விழும்போது உண்டாகும் எலும்பு, தசை முறிவு மற்றும் இரத்தக் கட்டிகள் குணமாக உளுந்து சிறந்த மருந்து. உளுந்தை நன்கு பொடி செய்து சலித்து வைத்து அதனுடன் தேவையான அளவு முட்டையின் வெள்ளை கரு கலந்து கலக்கி அடிபட்ட இடத்தில் தடவி கட்டு போட்டால் இரத்தக்கட்டு விரைவில் நீங்கும்.

இடுப்பு வலுப்பெற
சிலர் எப்போதும் இடுப்பில் கை வைத்துக்கொண்டே நிற்பார்கள். இடுப்பு நன்கு வலுவாக இருந்தால்தான் நிமிர்ந்து நடக்க முடியும்.
இடுப்பு வலுவில்லாமல் இருப்பவர்கள் உளுந்து களி செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் இடுப்பு வலி நீங்கும்.

குழந்தைகளுக்கு
சிறு குழந்தைகளுக்கு உளுந்து சேர்ந்த இட்லி கொடுப்பது நல்லது. அவை குழந்தையின் வளர்ச்சியில் முக்கிய பங்கெடுக்கும். மேலும் எலும்புகள் வலுப்பெறும்.

பெண்கள்
நாற்பது வயதைக் கடந்த பெண்களுக்கும், பருவம் அடைந்த பெண்களுக்கும் கண்டிப்பாக ஊட்டச்சத்து அதிகம் தேவை. இவர்களுக்கு உளுந்தை கஞ்சியாக செய்து கொடுத்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும்.அல்லது தோல் நீக்காத உளுந்துடன் தவிடு நீக்காத பச்சரிசி சேர்த்து அரைத்து களி செய்து நல்லெண்ணெய் மற்றும் பனைவெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் பலம் பெறும். இடுப்பு வலி குணமாகும்.

உளுந்தின் பயன்களைப் பற்றி தனிப் புத்தகமே எழுதும் அளவுக்கு மருத்துவப் பயன் உள்ளது.உளுந்தை தினமும் பயன்படுத்தி ஆரோக்கியமாக வாழ்வோம்.




Monday, June 4, 2012

தோல்வி தந்த வெற்றி


சிறுகதை - என்.சொக்கன்

'வெல்கம் பேக் வியூவர்ஸ், உங்க ஃபேவரைட் 'இளம் பாடகர்' நிகழ்ச்சியோட செமி ஃபைனல்ஸ் நடந்துட்டு இருக்கு. இங்கே நாலு போட்டியாளர்கள் இருக்காங்க, இதுல மூணு பேர் மட்டும்தான் ஃபைனலுக்குப் போக முடியும், ஒருத்தர் இப்பவே வெளியேறி ஆகணும். அப்படி எலிமினேட் ஆகப்போறவர் யாருன்னு அறிவிக்கிறதுக்காக நம்ம மதிப்பிற்குரிய ஜட்ஜஸை மேடைக்கு அழைக்கிறோம்!'


கை தட்டல்களுக்கு நடுவே, அந்த இரண்டு நடுவர்களும் மேடை ஏறினார்கள். தங்களிடம் இருந்த காகிதங்களை ஒரு முறை புரட்டிப் பார்த்துக்கொண்டு பேச ஆரம்பித்தார்கள்.

'
எல்லாருக்கும் வணக்கம், இன்னிக்குப் பாடின தினேஷ், தீபக், கிஷோர், மலர்விழி நாலு பேருமே ரொம்பப் பிரமாதமான திறமைசாலிங்க. வயசுல சின்னவங்களா இருந்தாலும்கூட, ஒருத்தரை ஒருத்தர் மிஞ்சிடணும் என்கிற வேகத்தோடு அற்புதமா பெர்ஃபார்ம் பண்ணாங்க. இதுல ஒருத்தரை மட்டும் தேர்ந்தெடுத்து எலிமினேட் செய்யணும்னா, அது எங்களுக்கு ரொம்பச் சிரமமான வேலைதான்!'

அதே மேடையின் ஓர் ஓரமாக உட்கார்ந்து இருந்த அந்த நான்கு பேரும், நீதிபதிகளைப் பதற்றத்துடன் பார்த்தார்கள். அவர்களுடைய முகங்களில், 'யார் வெளியேறப்போகிறோமோ?' என்கிற பதற்றமும் கவலையும் அப்பட்டமாகத் தெரிந்தது.

ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு, நடுவர்கள் தங்களுடைய தீர்ப்பை அறிவித்தார்கள். 'இன்னிக்கு, இந்த செமிஃபைனலில் இருந்து வெளியேறப்போகிற அந்த இளம் பாடகர்... தீபக்!'

உடனடியாக, திடுக்கிடவைக்கும் இசை ஒன்று ஒலித்தது. சட்டென்று ஏழெட்டு கேமராக்கள் அந்தச் சிறுவன் தீபக்கின் முகத்தில் படிந்தன. இன்னும் சில கேமராக்கள் அவனுடைய அப்பா, அம்மாவை மொய்த்தன. இதில் யார் முதலாவதாக அழத் தொடங்குவார்கள் என்று எல்லாரும் ஆவலுடன் காத்திருந்தார்கள்.

பின்னே? பல மாதங்களாக சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகிக்கொண்டு இருக்கும் இந்த 'இளம் பாடகர்' நிகழ்ச்சியில் சங்கீதத்துக்கு அடுத்தபடியாக, அழுகைக்குதான் முக்கியத்துவம். ஒவ்வொரு வாரமும் யாராவது ஒரு சிறுவனோ, சிறுமியோ வெளியேற்றப்படுவார்கள். அவரும் அவருடைய பெற்றோரும் ஏமாற்றத்துடன் கதறி அழுவதைப் பல கோணங்களில் க்ளோஸப்பாகக் காண்பித்து, சோகப் பின்னணி இசையைத் தருவார்கள். தமிழ்நாடே கலங்கிப்போய் உச்சுக்கொட்டும். 'பாவம்யா!' என்று தாய்மார்களும் பெரியோர்களும் கண்ணீரைத் துடைத்துக்கொள்வார்கள்.

இப்படி வாராவாரம் பலவிதமான அழுகைகளைப் பார்த்துப் பழகிப்போய் இருந்த ரசிகர்கள், இப்போது தீபக்கின் 'செமி ஃபைனல்' கதறலுக்காகக் காத்திருந்தார்கள். அவனுக்காகப் பரிதாபப்படத் தயாராகிக்கொண்டு இருந்தார்கள்.

ஆனால், ஆச்சர்யமான விஷயம், தீபக் அழவில்லை. லேசாகச் சிரித்தான். இதமான குரலில் நடுவர்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி சொன்னான்.

உஷாரான நிகழ்ச்சித் தொகுப்பாளர், அவனைக் கிளறிவிட முயன்றார். 'தீபக், நீ ரொம்ப நல்லாத்தான் பாடினே, ஆனாலும் ஜட்ஜஸ் உன்னை எலிமினேட் செய்யத் தீர்மானிச்சுட்டாங்க. இனிமே நீ ஃபைனலுக்குப் போக முடியாது, எப்படி ஃபீல் பண்றே? வருத்தமா இருக்கா?'

'
இல்லவே இல்லை சார்' என்றான் தீபக். 'நாலு பேர்ல யாராவது ஒருத்தர் இன்னிக்கு எலிமினேட் ஆவோம்னு நல்லாத் தெரியும். ஆக, 25% நான் வெளியேற வாய்ப்பு உண்டுன்னு எதிர்பார்த்துதான் இங்கே வந்தேன். என்னால முடிஞ்ச வரைக்கும் நல்லாப் பாடினேன். அதே சமயம், என்னோடு பாடின மத்தவங்களும் பெரிய டேலன்ட் உள்ளவங்க. அவங்களும் என்னை மாதிரி இதே போட்டியில் பல ரவுண்ட்ஸ்ல ஜெயிச்சு வந்தவங்கதானே? அதனால, இப்படி ஒரு ரிசல்ட் வரக்கூடும்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டேன். மனசுக்குள்ளே சின்ன ஏமாற்றம் இருந்தாலும் வருத்தமோ, வேதனையோ கண்டிப்பா இல்லை!' என்று தெளிவான குரலில் சொன்னான்.

'
என்ன தீபக் இப்படிச் சொல்றீங்க? நீங்க ஃபைனலுக்குப் போய்... ஜெயிச்சு இருந்தா, ஒரு வீடு, வெளிநாட்டுச் சுற்றுலானு ஏகப்பட்ட பரிசுகள் கிடைச்சு இருக்குமே' என்றார் ஒரு நடுவர்.

'
அட, பரிசுகளை விடுங்க. இந்தப் போட்டியில் ஜெயிச்சு இருந்தால், உங்களுக்கு சினிமாவிலே பாடும் வாய்ப்புக் கிடைக்கலாம், சடசடன்னு புகழோட உச்சிக்குப் போயிடலாம். அந்தச் சான்ஸை எல்லாம் மிஸ் பண்ணிட்டமோனு தோணலையா?' என்று விடாப்பிடியாகக் கேட்டார்.

'
உண்மைதான் சார். ஆனா, நாலு மாசத்துக்கு முன்னாடி வரைக்கும் என் அப்பா, அம்மா, ஃப்ரெண்ட்ஸ் தவிர, யாருக்கும் என்னைத் தெரியாது. ஒருத்தர்கூட என் குரலைக் கேட்டது இல்லை. இப்போ இந்த புரோக்கிராம்னால... லட்சக் கணக்கான மக்கள் நான் பாடுறதைக் கேட்டு ரசிச்சாங்க. அதுவே பெரிய விஷயம்தானே சார்? எப்பவும் கிடைச்சதை நினைச்சு சந்தோஷப் படுற மனசு வேணும். கிடைக்காததை நினைச்சு வருத்தப்பட ஆரம்பிச்சா, அதுக்கு முடிவே கிடையாதுன்னு எங்க அப்பா அடிக்கடி சொல்வார்.'

'
வெல்டன் தீபக்' என்று அவனைத் தட்டிக்கொடுத்தார் இன்னொரு நடுவர். 'தட்ஸ் தி ஸ்பிரிட், இந்த நிகழ்ச்சியில் எத்தனையோ சின்னப் பசங்க, பெரியவங்க கலந்துக்கிட்டு இருக்காங்க. அவங்களில் யாரும் உன்னை மாதிரி முதிர்ச்சியோடு பேசி, நான் பார்த்தது இல்லை. விஷ் யூ ஆல் தி பெஸ்ட்!' என்றார்.

மீண்டும் திடுக்கிடவைக்கும் அந்தப் பின்னணி இசை ஒலித்தது. போட்டியில் இருந்து வெளியேறும் தீபக்குக்கு சில சிறிய பரிசுகளைக் கொடுத்தார்கள். வாழ்த்தி, அனுப்பிவைத்தார்கள்.

தீபக், புன்னகை மாறாமல் மேடையில் இருந்து கீழே வந்தான். அங்கே காத்திருந்த அவனுடைய பெற்றோர், அவனை அணைத்துக் கொண்டார்கள். அவர்கள் முகத்திலும் துளிக் கண்ணீர் இல்லை.

சில நிமிடங்களுக்குப் பின்னர், அவர்கள் ஸ்டுடியோவில் எல்லாரிடமும் விடைபெற்றுக் கொண்டு வெளியே வந்தார்கள். வாசலை நோக்கி நடந்தார்கள்.

அங்கே ஒரு கோட்-சூட் பேர்வழி காத்திருந்தார். தீபக்கின் தந்தை கைகளைப் பற்றிக் குலுக்கினார். 'ஹலோ சார், என் பேரு மதிவாணன், உங்ககிட்ட ஃபைவ் மினிட்ஸ் பேசலாமா?'

'
சொல்லுங்க சார், என்ன விஷயம்?'

'
இன்னிக்கு ஸ்டேஜ்ல உங்க பையன் பேசினதைப் பார்த்து அசந்துட்டேன். இது எல்லாம் நீங்க எழுதிக் கொடுத்ததா? இல்லை, அவனே சொந்தமாப் பேசினானா?' என்று கேட்டார்.

'
இதை எல்லாம் யாராவது எழுதிக் கொடுப்பாங்களா சார்?' என்று சிரித்த தீபக்கின் தந்தை, 'அந்த நேரத்தில் அவனுக்கே அப்படித் தோணி இருக்கு. மனசுல பட்டதைப் பேசினான்' என்றார்.

'
வெரி குட் சார். இந்த வயசுல இவ்ளோ மெச்சூரிட்டியோடு பசங்க பேசுறது பெரிய விஷயம்' என்ற மதிவாணன், 'நான் இதே சானல்ல ஸ்டூடண்ட்ஸ்க்காக 'பேச்சுக் கலை' பத்தி ஒரு நிகழ்ச்சி நடத்துறேன். அதில் ஒவ்வொரு வாரமும் உங்க பையனைச் சிறப்பு விருந்தினராகக் கூப்பிட்டு கௌரவிக்க விரும்புறேன். இயல்பாப் பேசுறது எப்படி என அவன் தர்ற டிப்ஸ்... மத்த பிள்ளைகளுக்குப் பயன்படட்டுமே' என்றார்.

தீபக்கின் தந்தையும் தாயும் திகைப்போடு ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள். அன்றைய நிகழ்ச்சியில் தீபக் பாடிய பாடலின் வரி ஒன்று அவர்கள் காதுகளில் மீண்டும் ஒலித்தது...

'
ஒரு வாசல் மூடி,

மறுவாசல் வைப்பான் இறைவன்...!'

நன்றி : சுட்டி விகடன்