நாடு சுதந்திரம் பெற்றபோது, நமது பொருளாதாரம் மிகவும் பலவீனமாக இருந்தது. இன்றைய தொழில் வளமும், கட்டமைப்பு வசதிகளும் அன்றில்லை; தொலைத் தொடர்பு வசதிகளோ, போக்குவரத்து வசதிகளோ பெருகியிருக்கவில்லை. பெரும்பாலான மக்கள், வயிற்றுப்பாட்டுக்கு வேளாண்மையை மட்டுமே நம்பியிருந்த காலமது. ஆனாலும், மக்களிடத்தே கடினமாய் உழைத்து உயர வேண்டும் என்ற எண்ணம் குடி கொண்டிருந்தது. கடன் வாங்கி வாழ்க்கை நடத்துவதை அவமானமாகக் கருதினர்.இந்தச் சூழலில் தான் தேசத்தின் வளர்ச்சியை மனதில் கொண்டு, மத்திய, மாநில அரசுகள் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அறிமுகம் செய்யத் துவங்கின.
கடந்த, 1951ல் தோன்றிய கூட்டுறவு இயக்கம், மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. விவசாயிகளுக்கு, சிறு சிறு விவசாய கடன்கள் கிடைக்கச் செய்வதற்கென்றே உருவான அமைப்பு இது. காலப்போக்கில் திசைமாறியதால், கூட்டுறவுத் தத்துவத்தைத் தொலைத்து, அரசியல் வசப்பட்டு, இன்று ஊழல் மலிந்த நிறுவனமாக செயலற்றுக் கிடக்கிறது.
ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம், 1980களில் கொண்டு வரப்பட்டு மிகப்பெரிய வறுமை ஒழிப்புத் திட்டமாகக் கருதப்பட்டது. ஏழை மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்கென்றே இந்திய அரசு இத்திட்டத்தின் மூலம், 143 பில்லியன் ரூபாய்களை மானியமாக செலவிட்டது. (ஒரு பில்லியன் என்பது 100 கோடி.) இந்தியாவில் வாழும் ஏழைகளில் பெரும்பாலானோரை சென்றடைந்த முதல் மானியத் திட்டம் இது. ஏழை மக்களுக்கு வங்கிகளை அடையாளம் காட்டியதும் இந்த திட்டம் தான். அதுபோல் வாங்கிய கடனை திரும்ப கட்டாததால், வங்கிப் பக்கமே ஏழை மக்களை போக விடாமல் செய்ததும் இந்தத் திட்டம்தான். "அரசாங்கக் கடன்களை வாங்கினால் கட்டத் தேவையில்லை' என்ற தவறான உணர்வை மக்கள் மனதில் விதைத்ததும் இத்திட்டம் தான்.
அதற்குப் பிறகு புதிய அணுகுமுறையோடு, 1999ம் ஆண்டின் தொடக்கத்தில், புதிய வறுமை ஒழிப்புத் திட்டமாக, "சொர்ண ஜோதி கிராம சுவரோஜ்கார் யோஜனா' என்னும் மத்திய அரசின் மற்றுமொரு திட்டம் அறிமுகமானது. இத்திட்டமும் உரிய வகையில் ஏழைகளைச் சென்றடைய இயலாமல், மானியம் என்னும் மயக்கத்தில் மக்களை வீழ்த்தியது. பிறகு, 2005ம் ஆண்டிலிருந்து சோதனை முறையில் துவங்கப்பட்டு, தற்போது தேசமெங்கும் செயல்பாட்டிலிருந்து வரும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டமானது, மத்திய அரசின் நட்சத்திரத் திட்டமாக கருதப்படுகிறது. உழைக்கத் தெரிந்த அனைத்து கிராமவாசிகளுக்கும், ஆண்டிற்கு, 100 நாள் வேலையை உறுதி செய்வது, அவர்தம் உரிமையாகக் கருதப்பட்டது. உலகமே வியந்து பாராட்டிய இத்திட்டம், செயலாக்கம் பெறும்போது, மாநிலத்திற்கு மாநிலம் தரம் குன்றியும், சீர்கேடு நிறைந்தும், நோக்கத்தை விட்டுத் திசைமாறி பயணிக்கும் திட்டமாக மாறி வருகிறது. "வேலை செய்யாமல் கூலி பெறுவது மக்களின் உரிமை' என்ற மனோபாவத்தை மக்களிடையே விதைத்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்திற்கு, ஆண்டிற்கு, 3,450 கோடி ரூபாய் வரை, மத்திய அரசு, கூலியாக வாரி இறைத்தும், அவற்றில், ஆயிரத்தில் ஒரு பங்கு அளவு கூட பயனுள்ள பணிகள் நடைபெறவில்லை. மாறாக, தளர்ந்த நடைபோட்டுக் கொண்டிருக்கும் விவசாயத் தொழிலை மேலும் பலவீனப்படுத்தியிருக்கிறது.
மத்திய அரசானது, வறுமை ஒழிப்புத் திட்டங்கள் தவிர, பிற வளர்ச்சித் திட்டங்களுக்கும் பெருவாரியான மானியங்கள் வழங்கி வருகிறது. அவற்றுள் ஆண்டிற்கு, 90 ஆயிரம் கோடி அளவிலான உர மானியம் குறிப்பிடத்தக்கது. மாநில அரசுகளும், தன் பங்கிற்கு மானியத் திட்டங்களையும், இலவசங்களையும் வாரியிறைத்துக் கொண்டிருக்கின்றன. இலவசத் திட்டங்களை அறிமுகப்படுத்துவதில், தமிழகம், இந்தியாவிற்கே வழிகாட்டுகிறது. உலக வங்கியில் கடன் பெற்று முன்பு வாழ்ந்து காட்டுவோம் என்றும், தற்போது, புதுவாழ்வுத் திட்டம் என்றும் அழைக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் வறுமை ஒழிப்புத் திட்டம் இவற்றுள் குறிப்பிடத்தக்கது. இதற்கென, 750 கோடி ரூபாய் வரை மானியமாக வழங்கப்பட்டு வருகிறது. கடந்த, ஐந்தாண்டுகளில், வீடு தவறாமல் வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வழங்கி, அழகு பார்த்த வகையில், 4,500 கோடி ரூபாயை தமிழக அரசு செலவு செய்துள்ளது. தற்போது, தமிழக மக்களுக்கு, இலவசமாக அரிசி, கிரைண்டர், மிக்சி, மின் விசிறி வழங்கும் திட்டம், கறவை மாடுகள் மற்றும் வெள்ளாடுகள் வழங்கும் திட்டம் என, இலவசங்களை அள்ளி இறைத்திருக்கிறது தமிழக அரசு. இதற்கென, 8,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. தமிழகத்தில் நடைமுறையிலிருந்து வரும் மதிய உணவு திட்டத்திற்காக, ஆண்டிற்கு, 924 கோடி ரூபாய் வரை செலவு செய்யப்படுகிறது. கடந்த, 20 ஆண்டுகளாக, விவசாயத்திற்கு இலவச மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. வீடுகளுக்கு கூட ஒரு விளக்குத் திட்டம் என்ற வகையில், 1.30 லட்சம் வீடுகளுக்கு, இலவசமாக மின்சாரம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஆண்டிற்கு, 4,800 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தை ஆண்ட, ஆண்டு கொண்டிருக்கிற கட்சிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும், மாநிலத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்லக்கூடிய தொலைநோக்குப் பார்வை இல்லாதது மிகுந்த வருத்தத்திற்குரியது. இலவசங்கள், மானியங்கள் மூலம் மக்களை மயக்கும் செயல்களில்தான் பெரிதும் கவனம் செலுத்துகின்றனர். இதுபோன்ற குறுகிய கால குறிக்கோளோடு செயல்படுத்தக் கூடிய இலவசத் திட்டங்களும், மானியத் திட்டங்களும் நமது சமூகத்தில் எதிர்மறையான தாக்கங்களைத் தான் உண்டு பண்ணி வருகின்றன. அரசிடமிருந்து அனைத்தும் இனாமாக கிடைக்கும் என்ற எண்ணம் மேலோங்கி, மக்களிடம், உழைக்கும் உந்துதல் குறைந்து வருகிறது. மானியங்களும், இலவசத் திட்டங்களும் வறிய நிலையில் உள்ள மக்களை மட்டும்தான் சென்றடைய வேண்டும் என்பது நியதி. ஆனால், அவ்வாறு அரசால் செயல்படுத்த இயலாமல், சகட்டுமேனிக்கு அனைவருக்கும் இலவசங்கள் வழங்கப்படுவதால், இதன் நோக்கம் அடிபட்டுப் போய் விடுகிறது. இலவசத் திட்டங்களை செயல்படுத்துவதில், வெளிப்படைத் தன்மையோ, நேர்மையான செயல்பாடுகளோ இன்றி, ஊழலும், முறைகேடுகளும் பல்கிப் பெருகியுள்ளன. இதன் விளைவாக, தரம் தொலைந்து போகிறது. அரசிடமிருந்து தரமான சேவையை பெறுவது அரிதாகிவிடும் நிலை உள்ளது.
இந்நிலை தொடருமானால், நாட்டின் ஆக்கப்பூர்வமான நீடித்த வளர்ச்சி என்பது குதிரைக் கொம்பாகத்தான் இருக்கும். இதை மக்களுக்கு புரிய வைத்து, இலவசங்களை தவிர்த்து, தொலைநோக்குத் திட்டங்களால் நாட்டை முன்னோக்கி இட்டுச் செல்லும் திராணி, நேர்மையான அரசியல் தலைவர்களிடத்தே கூட இல்லாமல் போய் விட்டது. தமிழகத்தில் உள்ள நதிகளையெல்லாம் இணைக்கும் அவசியம் ஏற்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. இதற்காகும் பட்ஜெட், 40 ஆயிரம் கோடியாகலாம் என, நிபுணர்கள் கருதுகின்றனர். இவ்வளவு பெருந்தொகை நம்மால் திரட்டப்படுவது சாத்தியமே. இதன் வாயிலாக தமிழகத்தின் அடிப்படை வளம் உறுதி செய்யப்பட்டு விடும்; வாழ்வாதாரம் மேம்பாடு அடையும்; வறுமையும், பஞ்சமும் நம்மை நெருங்காது. நீர் வசதிகள் உறுதி செய்யப்பட்டு விட்டால், விவசாயிகளுக்கு எந்த மானியமும், இலவசங்களும் தேவையில்லையே.
சூரிய சக்தியை பெருவாரியாக பயன்படுத்தக் கூடிய தொழில்நுட்பத்தை கொண்டு வரமுடியும். இதற்கு செலவு செய்வது ஆக்கப்பூர்வமான மூலதனமே. இதன்மூலம் பூமியில் உள்ள இயற்கை வளத்தின் மீது கை வைக்காமல், நிலைத்த சக்தி வளத்தை எட்ட இயலும். மின் சக்தி போதிய அளவு கிடைக்கும்போது, நாட்டின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். இளைஞர்களின் சக்தியை சரியாக பயன்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் ஒரு சிறப்பு தொழிற்கல்வி மையம் அல்லது சமூகக் கல்லூரிகள் அமைத்து, வீணாகிக் கொண்டிருக்கும் இளைஞர் சக்தியை சரியான திசையில் திருப்புவதன் மூலம், நமது மாநிலத்தில் மனிதவளம் மேம்படும். மேலும், நாட்டில் நிலைத்த வளர்ச்சியை உறுதி செய்யவும் முடியும். இருப்போர், இல்லாதோர் என சமூகத்தில் பலதரப்பட்ட பிரிவினர் உள்ளனர். இதில் அரசின் கடமை யாதெனில், மிகவும் வறியோர், ஆதரவற்றோர், பலவீனப்பட்ட பிரிவினர் என, மிக மிக தாழ்வு நிலையில் உள்ளவர்களை அடையாளம் கண்டு, அவர்களது முன்னேற்றத்திற்கு தனிக்கவனம் செலுத்த வேண்டும். இவர்களுக்கு மட்டும் அரசின் மானியங்கள், இலவசங்கள் கிடைக்கச் செய்வதில் தவறில்லை. மக்கள் அனைவரும் இலவச திட்டங்களை கொடுத்தால், வாங்கிக் கொள்கிறார்களே தவிர, எவரும், "எங்களுக்கு அத்திட்டங்களை கொடு' என்று கேட்பதில்லை. அரசியல்வாதிகள் தான் இதில் அதிக ஆர்வமும், அக்கறையும் காட்டுகின்றனர். இலவசம் எனும் இனிப்பினை தவிர்த்து, கசப்பான வேப்பெண்ணெய் மருந்தை நம் மக்களுக்கு வழங்கும் திட சிந்தனையுள்ள நல்ல தலைமை காலத்தின் கட்டாயம். நம் ஆட்சியாளர்கள், இலவச தத்துவத்தை மறந்து, நீண்டகால நிலைத்த வளர்ச்சியை கவனத்தில் கொண்டு செயல்பட்டால், நல்ல மாற்றத்திற்கான அடித்தளம் உடன் அமையும் என்பதில் எவருக்கும் ஐயமிருக்காது. இமெயில்: dhancoastal@dhan.org
நன்றி : தினமலர்